’என்னுள் மாகவி’ - முனைவர் பலராமன் சுப்புராஜ்
'என்னுள் மாகவி'
- முனைவர் பலராமன் சுப்புராஜ்
அத்திப் பூத்தாற் போலத்தான் ஏடெடுப்பேன்
கவி ஒன்று எழுத...
அந்த அத்தி இன்று பூத்தது
பாரதிக்காக...
சொற்குவியலின் குப்பை என்று கவிதையை விமர்சித்த
க.நா.சு கண்முன் நிற்க...
'நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ!'
எனும் அடியை முழங்கிய மாகவி என்னுள் நுழைந்தது எப்போது?
அசை போட்டுப் பார்த்தேன்
மீண்டும் மீண்டும்...
சாதிகள் இல்லை என்றானே அப்போதா
இல்லை.. இல்லை..
காக்கை குருவி எங்கள் சாதி என்றானே அப்போதா
இல்லை.. இல்லை..
அச்சத்தை வேரறுத்து ரௌத்திரத்தை ஊட்டினானே அப்போதா
இல்லை.. இல்லை..
இப்படி எப்படியெல்லாமோ எண்ணிப் பார்த்தும்
அவனது நுழைவோ எனக்குப் பிடிபடவில்லை
சரி
உன்னைப் புரிந்து கொள்ளவா? இல்லை
உன் கவியை அறிந்து கொள்ளவா?
இவை இரண்டும் இல்லை என்றால்
பின் எதற்காக?
உன்னிடமே நான் கேட்டேன்
நீ சொன்னாய்
என்னுள் உன்னைக் காணத்தான் என்று...
எப்போதும் வியப்பு மேலிடாமல்
பார்த்துக் கொள்வேன்
அது நான் வளரத் தடையாக
இருக்கக்கூடாது என்பதற்காக..
ஆனால் உன்னை நினைக்கையில் மட்டும்
வியப்பு எப்போதும் இயல்பாய் எழுவது
ஏனோ?
நாட்டு விடுதலைக்கு உன் படைப்பைக் கருவி ஆக்கினாய்
அத்துடன் எங்களது மனங்களையும்
விடுதலை ஆக்கினாய்
இப்படி என்னுள் வந்தாய்
அன்று
கவியே மூச்சாக்கித் திரிந்தாய்
இன்று
உன்னையே மூச்சாக்கித் திரிகிறது கவி உலகம்..
கருத்துகள்
கருத்துரையிடுக